இந்தியா

வாக்காளர் பட்டியல் ஆதார் இணைப்பு; காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசு முடிவா?

Tamil Selvi Selvakumar

வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 


இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பதற்காக அவற்றை பெறும் பணி, கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதியுடன் இந்த நடவடிக்கைகள் முடிவடையும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், தற்போது இந்த கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை நீட்டிக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தமிழ்நாட்டில் 68 புள்ளி 75 சதவீத வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 99 சதவீத அளவுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 93 புள்ளி 91 சதவீத அளவுக்கும், ஆதார் விவரங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.