ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாடால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து அவதிப்பட்டு வரும் மக்களுக்கு சர்க்கரை விலை உயர்வு அதிர்ச்சியளித்துள்ளது.
கடந்த மாதம் வரை ரூ.47-க்கு விற்கப்பட்டு வந்த சர்க்கரை விலை ரூ.60 வரை உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சர்க்கரை விலை உயர்ந்தால் டீ, காபி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விளையும் உயரக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
சர்க்கரைக்கு மாற்றாக கருதப்படும் கருப்பட்டி, வெள்ளம், நாட்டு சர்க்கரை உள்ளிட்டப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க முடியாயத சாமானிய மக்கள் இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலுக்கு அடுத்தபடியாக சர்க்கரை உற்பத்தி செய்வதில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில் இந்த விலையேற்றம் வழக்கத்துக்கு மாறானது.
சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலக்கும் நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கு அதிக அளவில் கரும்பு பயன்படுவதே சர்க்கரை விலை உயர்வுக்கு காரணம் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. ஆனால் மத்திய அரசு இந்த கருத்தை மறுத்திருக்கிறது.
சர்க்கரை விலை உயர்வுக்கு எல்-நினோ காலநிலை நிகழ்வால் ஏற்பட்ட பருவமழை பாதிப்பும் ஓணம், ஜென்மாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைக் காலங்கள் வருவதும் காரணமாக கருதப்படுகிறது.
பண்டிகை வருவதால் சர்க்கரை விற்பனை நிறுவனங்கள் அதிக சர்க்கரையை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்க சேகரித்து வைக்கப்படும் சர்க்கரை அளவுக்கு வரம்பை நிர்ணயித்துள்ளது மத்திய அரசு. அதேப்போல சர்க்கரை ஏற்றுமதிக்கும் தடை விதித்துள்ளது.
பொதுமக்கள் சர்க்கரை விலை மேலும் உயரக்கூடும் என்ற பதற்றத்தினால், விழாக்காலத்துக்கும் சேர்த்து வாங்கி வைப்பது மற்றொரு காரணியாகப் பார்க்கப்படுகிறது.
ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 2025-26ஆம் ஆண்டு சர்க்கரை உற்பத்தியில் 30 லட்சம் டன் சர்க்கரை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டது. இது நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் சுமார் 10 சதவிகிதமாகும்.
சர்க்கரை சந்தையின் அளவு மிகப் பெரியது. எத்தனால் உற்பத்தியால் இதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.
ஆனால், சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைகளே எத்தனாலையும் உற்பத்தி செய்கின்றன. எத்தனால் உற்பத்தி ஆலைகளுக்கு லாபகரமாக இருந்தாலும், சர்க்கரைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஆலைகளில் எத்தனை சதவிகிதம் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை அளவிடுவதற்கான கண்காணிப்பு வசதிகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்க்கரை விலையேற்றம் குறித்து பேசியுள்ள தேசிய சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பின் தலைவர் பிரகாஷ் நாய்க்நவரே, 'தென் அமெரிக்க நாடான பிரேசில் மட்டுமே சர்க்கரை வாங்குவதற்கு உகந்த நாடாக உள்ளது. பிரேசிலில் இருந்து சரக்கு கப்பல்கள் சர்க்கரையை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருப்பதாகவும், அந்தக் கப்பல்கள் இந்தியாவை வந்தடைய 40 முதல் 45 நாட்கள் ஆகலாம்' என்றும் அவர் கூறியுள்ளார். அதன்பிறகு சர்க்கரை விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரும்பு சாகுபடி அக்டோபரில் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும். வருகின்ற அக்டோபர் மாதம் கரும்பு அறுவடை தொடங்கியதும் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்