இந்தியா

உங்க விருப்பத்திற்கெல்லாம் வழக்கை ஒத்தி வைக்க முடியாது... வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு வழக்கில் நீதிபதி காட்டம்!!

வன்னியர்களுக்கான  10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழக்கை எந்தவொரு காரணத்திற்காகவும் வேறு தேதிக்கு ஒத்திவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மேலும், பாமக உள்ளிட்ட பலர் சார்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு வரும் 15 மற்றும் 16 தேதிகளில் நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், ஒருங்கிணைந்த வாதங்களின் தொகுப்பை சில மனுதாரர்கள் இன்னும் அளிக்காததால், விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் வருண் சோப்ரா கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த  நீதிபதி அமர்வு, வழக்கை எந்த ஒரு காரணத்திற்காகவும் வேறு தேதிக்கு ஒத்திவைக்க முடியாது என்று  திட்டவட்டமாக தெரிவித்தது. வழக்கின் மனு மற்றும் வாதங்களின் தொகுப்பை  தாக்கல் செய்யாதவர்கள் இரண்டு நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.