இந்தியா

நாயை பலூன் கட்டி பறக்கவிட்ட இளைஞர் ... அதிரடியாக கைது செய்தது போலீஸ்!!

Malaimurasu Seithigal TV

நாயை ஹீலியம் பலூனில் கட்டி பறக்கவிட்டு வீடியோ எடுத்த பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யூடியூப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், பயன்படுத்தி வரும் மக்கள், தங்கள் சொந்த வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை அவ்வப்போது வீடியோவாக பதிவிட்டு, லைக்ஸ்களை அள்ளி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர். குறிப்பாக பலர் இந்த லாக்டவுனை பயன்படுத்தி  தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள், தங்கள் வீட்டில் நடப்பவைகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகின்றனர். 

இதேபோல் டெல்லியை சேர்ந்த கவுரவ் சோன் எனும் இளைஞரும்,  வித்தியாசமான வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அண்மையில் இவரது நாய்க்குட்டியை ஹீலியம் பலூனில் கட்டி பறக்க விட்டபடி வீடியோ ஒன்றை எடுத்து அதை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் மிருக வதை செய்வதாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த வீடியோவிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து விளக்கம் தெரிவித்த இளைஞர், உரிய பாதுகாப்பு வசதியுடன் தான் நாய்க்குட்டி பறக்கவிட்டு வீடியோ எடுக்கப்பட்டதாகவும், தான் மிருக வதை செய்யவில்லை என்றும் அவர்தெரிவித்ததுடன் இதன் மூலம் பிறர் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார்.

இருப்பினும் தெற்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்கு பதியப்பட்டு,  அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.