தமிழ்நாடு

சுய உதவி குழு, சுழல் நிதிக்காக 15ஆயிரம் கோடி ஒதுக்கீடு; முதலமைச்ர் அறிவிப்பு!

Malaimurasu Seithigal TV

நடப்பாண்டில் 10 ஆயிரம் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்க 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் மத்திய அரசின் பங்களிப்புடன் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும்  திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அதன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமை வகித்தார். அப்போது உரையாற்றிய அவர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் பிரதான் மந்திரி கோசன் சக்தி நிர்மல் சத்துணவு திட்டத்தின் கீழ்  இந்த ஆண்டில் 46 லட்சத்து 70 ஆயிரத்து 458 மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்க 25,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அதற்கான சுழல் நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், வரும் ஆண்டில் 10 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய மதி சந்தை என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். மதி திணை அலுவலகங்கள் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.