தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பதிவானது. அதன் தொடர்ச்சியாக சில மாவட்டங்களிலும் கன முதல் மிக கன மழை வரை பெய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழையின் தீவிரம் இரண்டு நாட்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி, வங்கக்கடலில் ஏற்கனவே அறிவித்தபடி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
இந்த நிலையில், கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.