தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 2வாரம் ஊரடங்கு நீட்டிப்பு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை...

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் உச்சத்தை அடைந்ததால், கடந்த 10ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், தினசரி தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால், மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின் பேரில், மீண்டும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

ஆனால், இம்முறை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. என்றாலும் கூட கொரோனா பாதிப்பு எதிர்பார்த்த அளவிற்கு குறையாமல், தினசரி பாதிப்பு 33 ஆயிரத்தைக் கடந்து விடுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.