தமிழ்நாடு

சூடானில் இருந்து மீட்கப்பட்ட 5 பேர்...  சென்னை வந்தனர்...!!

Malaimurasu Seithigal TV

உள்நாட்டு போர் நடக்கும் சூடானில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட ஐந்து நபர்கள் சென்னை வந்தடைந்தனர்.

சூடான் நாட்டில் இராணுவத்திற்கும் துணை இராணுவ படைகளுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது. இம்மோதல் போக்கு வளர்ந்து தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. இதில் சிக்கி 100 கணக்கான மக்கள் இறந்துள்ளனர். உள்நாட்டு போரில் இருந்து தங்கள் நாட்டு மக்களை காக்க ஒவ்வொரு நாடுகளும் பல கட்ட முயற்சிகளை எடுத்துள்ளன. இதில் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் 'காவிரி'யை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனோடு சேர்ந்து, சூடானில் சிக்கியுள்ள தமிழ் நாட்டவர்களை கண்டறிந்து அவர்களை சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் முழு பொறுப்பையும், செலவையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த 9 பேர் நேற்று இரவு சூடானிலிருந்து டெல்லி வந்தடைந்தனர். இதில் ஐந்து நபர்கள் இன்று காலை சென்னை விமான நிலையத்தினை வந்தடைந்தனர். சென்னை வந்த 5 பேரையும் வருவாய் துறை  அலுவலர்கள் தலைமையிலான குழு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி  வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மீட்கப்பட்ட நபர்கள், கடந்த 8 ஆண்டுகளாக பார்த்த சூடானுக்கும் இந்த குறிப்பிட்ட போர் நடக்கும் வேலையில் இருக்கும் சூடானுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது எனத் தெரிவித்தனர். எங்கு திரும்பினாலும் துப்பாக்கி சூடு, கலவரம் என சூடானின் நிலையே அடிப்படையாக மாறியிப்பதாக கூறிய அவர்கள் இதனால் தங்களது பொருளாதாரம் முற்றிலும் தடைபட்டிருப்பதாகவும், இத்தனை ஆண்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்த அனைத்தையும் விட்டுவிட்டு கையில் ஒரே ஒரு பையுடன் தாயகம் திரும்புயதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

தொடரந்து போர் பதற்றம் முடிவுக்கு வந்தாலும் மீண்டும் சூடான் செல்லும் எண்ணம் இல்லை என கூறியவர்கள் சூடானிலிருந்து தங்களை மீட்டு வர உதவியாக இருந்த இந்திய தூதரகத்திற்கும் மத்திய அரசுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அதிலும் குறிப்பாக தாயகம் திரும்ப உதவிய தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவிப்பதாகவும் கூறினர்.