சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி பரந்து விரிந்து 6 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.
இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதையொட்டி செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து நீர் மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.
அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில், நேற்று 23. 36 அடியாக இருந்தது.
செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு அளவான 23 அடியை தாண்டியதால் பாதுகாப்பு கருதி நேற்று நண்பகல் முதல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு 250 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 500 கன அடி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடையார் உள்ளிட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.