தமிழ்நாடு

கொரோனாவால் உயிரிழப்போரில் 90% பேர் தடுப்பூசி செலுத்தாதவர்களே…  

கொரோனா தொற்றால் உயிரிழப்போரில், 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தாதவர்களே என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

கொரோனா தொற்றால் உயிரிழப்போரில், 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தாதவர்களே என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 4ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 3 கட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் வெற்றியை தந்துள்ளதாக கூறினார். இன்று தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 760 மையங்கள் மற்றும் சென்னையில் ஆயிரத்து 600 இடங்களிலும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மரபணு பகுப்பாய்வு கூடத்தில் டெல்டா தவிர புதியவகை கொரோனா இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், மேற்கு மாவட்டங்களில் தொற்று குறைவதற்கான அறிகுறி தென்படத் தொடங்கியுள்ளதாக தெரிவித்த அவர், கொரோனா இறப்பில் 90 சதவீத உயிரிழப்பு தடுப்பூசி செலுத்தாதவர்கள்தான் என்றார். 60 வயதுக்கு மேலானவர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது கொரோனாவுடன் டெங்கு பாதிப்பும் கவனிக்கப்பட வேண்டி உள்ளதாக தெரிவித்தார்.