தமிழ்நாடு

மதுபானக்கடையை அகற்ற கோரிய வழக்கு...! உத்தரவு பிறபித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..!

Malaimurasu Seithigal TV

சிவகங்கை மாவட்டம் அழகாபுரியைச் சேர்ந்த சகாயமேரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள கே.கே.நகர் சந்திப்பில் டாஸ்மாக் நிர்வாகம் பார் உடன் கூடிய மதுபான சில்லறை விற்பனைக் கடையை நிறுவியுள்ளது.

இந்தப் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும்  தேவாலயம் அமைந்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும், பெண்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மதுபான கடை அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் சூழல் உள்ளது. எனவே, காளையார் கோவில், மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையின் அருகே கே.கே.நகர் சந்திப்பிலுள்ள மதுபான கடையை மூடவும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுபான கடையை மூடுவது அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட மதுபான கடை மேலாளர் ஆகியோர் சட்டத்திற்கு உட்பட்டு 2 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.