கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஓடிக் கொண்டிருந்த பள்ளி வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தில் உள்ள தனியார் பள்ளிப் பேருந்து பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. தீத்தாம்பாளையம் என்ற இடத்தில் பேருந்து சென்ற போது, பேருந்தின் முன்புறத்திலிருந்து புகை வெளியேறியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு மாணவர்களை பாதுகாப்பாக கீழே இறக்கினார். அதன்பிறகு சிறிது நேரத்திலேயே, தீ மளமளவென பரவி வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வேன் திடீரென தீப்பிடித்தது எப்படி? வேனில் இருந்து எப்படி புகை ஏற்பட்டது? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.