தமிழ்நாடு

மதுபோதையால் நடந்த கோரம்! மாணவரின் உறுப்புகள் தானம்!

மது போதையில் அடையாளம் தெரியாத நபர், 7ம் வகுப்பு படிக்கும் மாணவர் மீது மோதியதால் அந்த மாணவர் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர்.

Malaimurasu Seithigal TV

வேலூர்: ஒடுக்கத்தூர் அடுத்த சின்னம்பள்ளி குப்பத்தை சேர்ந்த தையல் தொழிலாளி சதீஷ் - நந்தினி தம்பதியினரின் இளைய மகன் துர்கபிரசாந்த் (13) கடந்த ஞாயிற்று கிழமை (25.09.2022) மாலை, பாக்கம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பும் போது, சிறுவனின் மிதிவண்டி மீது மது போதையில் சென்ற அடையாளம் தெரியாத நபரின் இருசக்கர வாகனம் மோதியது.

அதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவன் துர்காபிரசாத்தை மீட்டு  அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று  மூளைச்சாவு அடைந்து உள்ளார்.

இதனை அடுத்து அவரது பெற்றோரின் அனுமதியோடு சிறுவனின் கல்லீரல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் ஒன்று எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் சென்னை ராமசந்திரா மருத்துவமனைக்கும், உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

இறந்த மாணவரின் பெற்றோர் தங்களின் மகன் உயிரிழப்பு காரணம் மது போதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய அடையாளம் தெரியாத நபர் தான் என கூறினர். மேலும், மதுவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் - மூளைசாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை அனைவரும் மற்றவர்கள் வாழ்வு பெற தானமாக அளிக்க வேண்டுமெனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.