அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க முடியாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி அதில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த பலரும், தற்போது ஈபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் நாளுக்கு நாள் ஈபிஎஸ்க்கு ஆதரவு பெருகி வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என்ற ஓ.பி.எஸ். கோரிக்கையை காவல்துறை நிராகரித்துள்ளது. அதில் பொது இடத்தில் கூட்டம் நடந்தால் மட்டுமே அனுமதி தரவோ, மறுக்கவோ முடியும் என்றும் தனி நபருக்கு சொந்தமான உள் அரங்கத்தில் கூட்டம் நடப்பதால் தலையிட முடியாது எனவும் ஆவடி காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி அதிமுக பொதுக்குழுவுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.