தமிழ்நாடு

"ரயில் விபத்தில் தமிழர்கள் யாருக்கும் பாதிப்பில்லை"தமிழ்நாடு அரசு மீட்புக் குழு!

தொடர்பு கொள்ள முடியாத நபர்கள் நலமுடன் உள்ளனர்.

Malaimurasu Seithigal TV

ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் யாருக்கும் பாதிப்பில்லை எனவும் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் சென்னை திரும்பிய அரசு அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளனர். 

ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆராய அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சிவசங்கர் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 3 நாட்களுக்கு முன் ஒடிசா சென்றனர்.

தமிழ்நாடு திரும்பிய அமைச்சர்கள் குழு நேற்றே இச்சம்பவம் குறித்து  முதலமைச்சரிடம் விளக்கம் அளித்த நிலையில்  பணீந்திர ரெட்டி, குமார் ஜெயந்த் மற்றும் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட அரசு அதிகாரிகள் குழு இன்று அதிகாலை சென்னை திரும்பினர். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பணீந்திர ரெட்டி, ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் தமிழகத்தை சார்ந்த ஒருவர் கூட உயிரிழக்காத நிலையில் யாரும்  காயமடையவில்லை என தெரிவித்தார். கோரமண்டல் ரயிலில் 127 பேர் முன்பதிவு செய்து சென்னைக்கு பயணம் செய்ய இருந்ததாகவும் அதில் 17 பேர்  பயணம் செய்யவில்லை எனவும் கூறினார். மேலும், தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள 6 பேரும் நலமாக இருப்பதாக தெரிவித்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 382 பேரில் தமிழர்கள் இல்லை எனவும் தெரிவித்தனர்.