தமிழ்நாடு

ஆண்டாள் கோவில் யானை...! மீண்டும் ஆய்வு செய்த அசாம் வன அதிகாரிகள்..!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி வதந்தியை கிளப்பிய நிலையில் மீண்டும் அசாம் வன அதிகாரிகள் ஆய்வு...

Malaimurasu Seithigal TV

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த 2011ஆம்  ஆண்டு பெண் யானை கொண்டு வரப்பட்டது. இதற்கு ஜெயமாலியதா என்ற பெயரும் சூட்டப்பட்டது. கோயில் யானை, மண்டபத்தில் வைத்து வளர்க்கப்பட்டு வந்த நிலையில், யானை தினசரி ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசித்துவிட்டு வீதி உலா புறப்பட்டு நிகழ்ச்சிக்கு வந்து செல்லும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் வைத்து யானை தாக்கப்பட்டதை தொடர்ந்து யானை பாகன்கள் இரண்டு பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். புதிய பாகன்கள் நியமிக்கப்பட்டு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் யானை தாக்கப்படுவதாக தொடர்ந்து வீடியோ பரவி வதந்தியை ஏற்படுத்தியது. 

அதன் பின்னர் 15 லட்ச ரூபாய் செலவில் யானைக்காக கிருஷ்ணன்கோவிலில் நீச்சல் குளம் மற்றும்  நவீன வசதிகளுடன் பெரிய மின்விசிறி மற்றும் குளிப்பதற்கு ஷவர்கள் அமைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து யானை தாக்கப்படுவதாக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலான நிலையில் கடந்த 5ஆம் தேதி தமிழக அரசு சிறப்பு குழு அமைத்து யானை தாக்கப்பட்டதா, தற்போது யானை நிலைமை என்ன என்பது குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் யானை நலமுடன் இருப்பதாக தமிழக அரசுக்கு அக்குழு அறிக்கை சமர்ப்பித்தது. 

இந்நிலையில் யானை அசாமில் இருந்து கொண்டு வரப்பட்டதால் அசாமை சேர்ந்த வன பாதுகாவலர், யானையை மீண்டும் அஸ்ஸாமிற்கு கொண்டு வர வேண்டும் என அசாம் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனையடுத்து அசாம் வன பாதுகாவலர் ஹித்தேஷ் மிஸ்ரா, காவல் கண்காணிப்பாளர் அபர்ணா நடராஜன், வன உயிரின பேராசிரியர் கே. கே. ஷர்மா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த துணைவன பாதுகாவலர் நாகநாதன் உள்ளிட்ட சிறப்பு குழுவினர் யானையை ஆய்வு செய்தனர்.