தமிழ்நாடு

"உதயநிதிக்கு உண்டு அமைச்சர் பதவி, காவல்துறைக்கு இல்லை பதவி உயர்வு" அண்ணாமலை விமர்சனம்!

Malaimurasu Seithigal TV

காவல்துறையினருக்கு பதவி உயர்வு வழங்காத திமுக அரசு, உதயநிதிக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்ப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார். அதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்றார். புதிய காவிரி பாலம், பேருந்து நிலையம் வழியாக சென்று ஆனங்கூர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் அண்ணாமலை  பொதுமக்கள் இடையே உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், திமுக அளித்த 511 தேர்தல் வாக்குறுதிகளில் 99 சதவிதம் நிறைவேறிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் கூறி வருவதாக சாடினார். 

தொடர்ந்து பேசிய அவர், கனிம வளங்களைக் காக்க தனி அமைச்சரை திமுக அரசு நியமிக்கவில்லை என்றும், கைத்தறித்துறை அமைச்சர் நெசவாளர்கள் திட்டத்தில் 80 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.

திமுகவின் 30 மாத கால ஆட்சியில் காவல்துறையில் பெருமளவில் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை என்று பேசிய அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் அமைச்சராக அரசு பதவி உயர்வு அளித்துள்ளது என்று விமர்சனம் செய்தார்.