தமிழ்நாடு

”இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி” வைகோ கண்டனம்!

Tamil Selvi Selvakumar

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சிப்பதற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய கூட்டணி இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்றுவதற்கு முயற்சி செய்வதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சிப்பதாக கூறி மதிமுக பொது செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதம் என்று இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான முயற்சி என்பது இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் அத்தியாயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆர். எஸ். எஸ், இந்துத்துவா செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மோடி அரசு இந்தியாவின் பெயரை ‘பாரதம்’ என்று மாற்றுவதற்கு முனைந்திருக்கிறது எனவும், இது கடும் கண்டனத்துக்கு உரியது எனவும் வைகோ கூறியிருக்கிறார். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது ஒன்று தான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் வைகோ தெரிவித்திருக்கிறார்.