தமிழ்நாடு

ஆகஸ்ட் 14 : மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்க அரசு உத்தரவு!

Tamil Selvi Selvakumar

சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வரும் ஆகஸ்ட் 14ம் தேதி இனிப்பு பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை  தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்,  சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி  இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவப்பு வெளியிடப்பட்டது.

இருப்பினும் ஜூன் 3ம் தேதி பள்ளி விடுமுறை என்பதால், தேசிய சமூக பாதுகாப்பு தினமான ஆகஸ்ட் 14ம் தேதி இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, அனைத்து பள்ளிகளிலும் சமூக நலத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72லட்சம் மாணவ மாணவியர்களும், 54,439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 இலட்சம் குழந்தைகளும் பயன்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.