தமிழ்நாடு

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து...! மறுப்பு தெரிவித்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்...!

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

சென்னை மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இரு தனியார் பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், பல்கலைக்கழக மானியக்குழுவுக்கும் விண்ணப்பித்திருந்தன. இதனை பரிசீலித்த அண்ணா பல்கலைக்கழகம் விதிகள் முறையாக பூர்த்தி செய்யப்படவில்லை எனக்கூறி தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து தனியார் கல்லூரிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடர்பான அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளுக்கு எந்த சட்ட வலுவும் இல்லை என்று உயர் நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்துள்ளதால், அந்த விதிகளை மட்டுமே, தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்கான அடிப்படையாக கருத முடியாது எனக் கூறி, இரு கல்லூரிகளின் விண்ணப்பத்தை நிராகரித்த அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனு மீதான விசரணையில், 4 வாரங்களில் பல்கலைக்கழக மானியக்குழு சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

-- சுஜிதா ஜோதி