தமிழ்நாடு

நெல்லையில் தொடரும் அசம்பாவிதங்கள்... பாஜக பிரமுகர் மீது வெறிச்செயல்!!

Malaimurasu Seithigal TV

நெல்லையில், நேற்று இரவு நள்ளிரவில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மூளிகுளத்தைச் சேர்ந்தவர் ஜெகன்(34). இவர் நெல்லை மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு மூளிக்குளம் கடைவீதியில் தனது நண்பர்களுடன் பேசிவிட்டு, வீட்டிற்குக் கிளம்பி சென்றுள்ளார். அப்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெகனை கொடூரமாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜெகனை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஜெகன் பரிதாபமாக பலியானார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் 6 பேரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக கட்சியின் பிரமுகர், வெட்டிக்கொலைச் செய்யப்பட்டதையடுத்து, அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.