'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) தலைவர் நடிகர் விஜய் தலைமையில் கரூர் வேலாயுதம்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், தற்போது தமிழக அரசியலில் மட்டுமின்றி, கட்சியின் நிர்வாக மற்றும் சட்டரீதியான எதிர்காலத்திலும் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. இந்த வழக்கில் காவல்துறையின் குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்றத்தின் கேள்விகள் அனைத்தும் தவெக-விற்கும் அதன் தலைவர் விஜய்க்கும் எதிராகத் திரும்பியுள்ள நிலையில், இந்தக் கடுமையான சட்ட நெருக்கடியில் இருந்து மீள, நடிகர் விஜய் நேரடியாக டெல்லியில் உள்ள தேசியத் தலைமையின் உதவியை நாட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தவெகவின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதிஅழகன் உட்படப் பல நிர்வாகிகள்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து அதிரடியாகக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டிருந்தது.
ஆனால் அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். விசாரணை தொடக்க நிலையில் உள்ளதாக கூறி புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரது மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதி ஜோதி ராமன் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே வன்முறையைத் தூண்டும் விதமாக சர்ச்சைப் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரின் முன் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியானதால், தவெக -வின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கைதாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.