தமிழ்நாடு

ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்று..! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்று வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் உள்ள ஐ.டி.ஐ.க்களில் படித்து விட்டு, மேற்படிப்பைத் தொடர முடியாத சூழலைக் கருத்தில் கொண்டு, ஐ.டி.ஐ.-களில் படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக, 8-ம் வகுப்புக்குப் பின் ஐ.டி.ஐ. -களில் சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10-ம் வகுப்புக்கு பின் ஐ.டி.ஐ. சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஐ.டி.ஐ.  பயிலும் மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் வகையிலேயே இணை சான்று வழங்கப்படுவதாகவும், இது அரசு வேலைவாய்ப்புக்கோ அல்லது இதர வேலைவாய்ப்புக்கோ பொருந்தாது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.