தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசு, தேர்தலின் போது அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் “சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை” திட்டத்தை கொண்டு வர பதவியேற்ற முதல் நாளிலேயே முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டிருந்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து தேவையான நிர்வாக மற்றும் காவல்துறை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று “சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை” திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை விரைவாக கண்டறிந்து தடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி உதவி மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கும் இந்த சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் செயல்படவுள்ள இந்த சிறப்பு அதிரடிப்படையில் பெண்கள் காவல்துறை அதிகாரிகள், சைபர் குற்றப்பிரிவு நிபுணர்கள் மற்றும் விரைவு மீட்பு குழுக்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன், அவசர உதவி அழைப்புகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொல்லை, இணையவழி துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை ரோந்து வாகனத்தை ஓட்டி தொடங்கி வைத்து உரையாற்றினார். அதில் “ஒரு சில நிகழ்ச்சி மட்டும் தான் மனதிற்கு மகிழ்ச்சி தரும் அப்படி பட்ட ஒரு நிகழ்வு தான் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை துவக்க நிகழ்ச்சி.. தேர்தலின் போது வெறும் வாக்குறுதியாக சொன்னது கிடையாது இந்த திட்டம் மனதார சொன்ன திட்டம் அதனால் தான் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக இந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம். தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முதல் படி தான் இந்த திட்டம்.
இங்கு பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கேட்கும் போது கண் கலங்குகிறது. இதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கும் போது போதை பொருள் முக்கிய காரணமாக இருக்கிறது அதையும் விரைவில் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தப்பு செய்பவர்களுக்கு வார்னிங் கொடுக்கிறேன் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். சிங்கப் பெண் அதிரடிப்படையில் 2,500 புதிய பணியிடங்கள் கொண்டு வரப்படும்” என கூறி பெண்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.