தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்...!

Tamil Selvi Selvakumar

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கை மற்றும் கால்களை தயாரிப்பதற்கான புனர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

28 கோடி ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒப்புயர்வு மையக் கட்டடம், சென்னை கே.கே.நகரில் சுகாதாரத்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டது. அதனை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ப்ரியா, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த புதிய ஒப்புயர்வு மையம் மூலம் 12 கோடிக்கும் மேற்பட்ட உபகரணங்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவமனைக்கும் வழங்கப்படவுள்ளதாகவும்,  கட்டணமே இல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அபயம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் வழங்கக்கூடிய ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை ஆயிரத்து 500 ரூபாயாக மாற்றி வழங்கப்பட உள்ளதாக கூறினார். மாற்றுத்திறனாளிகளுக்காக நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் ஆயிரத்து 808 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.