ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்த கடந்த அதிமுக அரசு இயற்றிய சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் உள்ளது.
சமீபகாலமாக தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பணமிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்த அவசர சட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு அதற்காக குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கே. சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில், கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இக்குழு தனது பரிந்துரைகளை இரண்டு வாரங்களில் அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் அரசுமுடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.