தமிழ்நாடு

அத்துமீறலை அடக்கிய தீர்மானம் - முரசொலி!

Tamil Selvi Selvakumar

ஆளுநரின் அத்துமீறலை அடக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி அடக்கியும் காட்டிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று முரசொலி நாளிதழில் தலையங்கம் வெளியாகியுள்ளது.

அரசியல் ரீதியாக மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்யும்போது ஆளுநர் பதவி வகிப்பவர், அரசியல் ரீதியாக செயல்படுகிறாரோ என்ற பார்வை இருக்கும். மத்தியில் பா.ஜ.க. அரசு ஆள்கிறது. மாநிலத்தை தி.மு.க. அரசு ஆள்கிறது. அதனால் ‘சர்ச்சை வருவது இயற்கைதான்’ என்பதைப் போல அவர் அதனை சாதாரணமாக ஆக்கப் பார்த்தார். 

இதில் பா.ஜ.க. - தி.மு.க. முரண்பாடுகள் இல்லை. ஆளுநரின் தன்னிச்சையான, மர்மமான நிலைப்பாடுகள்தான் பொதுவெளியில் விமர்சிக்கப்பட்டது. மத்தியத்தில் ஒரு கட்சி ஆட்சி, மாநிலத்தில் இன்னொரு கட்சி ஆட்சி என்பதல்ல காரணம்!

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரண்டு மணி நேரத்தில் கையெழுத்துப் போட்டு விட்டார் ஆளுநர். அத்தோடு பிரச்சினை முடிந்து விட்டது என இருக்க முடியாது.

மாகாணங்களை ஆளும் கட்சிகளை அடக்குவதற்காக மாநில ஆளுநர்களை பிரிட்டிஷ் ஆட்சி பயன்படுத்தியது. அதற்காகத்தான், இப்போதைய பா.ஜ.க.வும் ஆளுநர்களை பயன்படுத்துகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று முரசொலி நாளிதழில் தலையங்கம் வெளியாகியுள்ளது.