தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு : தலைமைச் செயலாளர் ஆலோசனை!

Malaimurasu Seithigal TV

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தென்மேற்கு பருவமழை பாதுகாப்புக்காக, மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளின் விபர பட்டியல், அவசரகால போக்குவரத்து வாகனங்கள், நீர்நிலைகள் குறித்த விபரங்கள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் குறித்த விபரங்கள் தயார் நிலையில் வைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சாலையோர மரங்கள் சேதமடைந்தால் மீட்பு பணிக்கு, பொக்லைன் இயந்திரம், புல்டோசர், மரங்களை வெட்டும் இயந்திரம், போர்டபில் ஜெனரேட்டர், டார்ச் லைட் உள்ளிட்டவை தயார் நிலையில் இருக்க வைத்திருக்க வேண்டும் என்றும், அணைகள், ஏரி, குளக்கரைகளில் தேவையான அளவு மண் மூட்டைகளை அடுக்கி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், சாலைகளில் மழை நீர் தேங்காதவாறு முன்கூட்டியே சீரமைக்க வேண்டும், மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் தேவையான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.