சென்னையில் போலீசாரின் உரிமம் பெற்று முறையான பயிற்சிகள் பெற்ற வல்லுனர்களின் உதவியோடு மனித உடலில் ஏற்படும் வலிகளை போக்கும் வகையிலும், மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்கள் மூலமாக பல்வேறு சேவைகளை தனியார் மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்கள் கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் போலீசாரின் முறையான உரிமம் பெறாமல் சில மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இந்தநிலையில் சென்னை முழுவதும் உள்ள மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்த மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக இயங்கி வரும் மசாஜ் சென்டர்கள் குறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கீழ்பாக்கம், தி.நகர், அண்ணாநகர், வடபழனி, அடையார் மற்றும் திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 151 மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.