தமிழ்நாடு

“மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்” - வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.. மு.க ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு!

இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும் கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்..

Mahalakshmi Somasundaram

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று வரும் நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும், திமுகவிற்காக உழைத்த தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.

நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.

எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.” என பதிவிட்டுள்ளார். மேலும் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் முதல்வர் தோல்வியை தழுவியுள்ளது கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.