bomb threat through online  
தமிழ்நாடு

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்; தரவுகளை தர மறுக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்!!

இமெயில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தற்போது வரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் 25 வழக்குகளும்...

மாலை முரசு செய்தி குழு

கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 550-க்கும் மேற்பட்ட இமெயில் வெடிகுண்டு மிரட்டலானது விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் (Anti Terrorism Squad) சைபர் கிரைம் போலீசாரம் (Cyber Crime) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இமெயில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தற்போது வரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் 25 வழக்குகளும், சைபர் க்ரைம் போலீசார் 15-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில், மிரட்டல் விடுக்கப்படும் மெயில்களில் 95 சதவிகித இ-மெயில் ஐ.டி.,கள் பிரபல நிறுவனத்தின் Hotmail மற்றும் OutLook மெயில்களிலிருந்து விடுக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மர்ம நபர்களால் உருவாக்கப்படும் மெயில் ஐடி -யானது அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் தானாகவே மறைந்து விடும் வகையில் உருவாக்கப்பட்டு மிரட்டல் அனுப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் பெயரில் உருவாக்கிய இ-மெயில் ஐ.டி களிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக இந்தியாவில் 12 மாநிலங்களில் 12 வழக்குப் பதிவுகளும், அமெரிக்காவில் ஒரு வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், உத்தரப்பிரதேசம், (டெல்லி) உள்ளிட்ட 12 மாநிலங்களில் தமிழகத்திலிருந்து விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர்பாக 12 வழக்கு பதிவுகளும், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஒரு வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், அமெரிக்கா மட்டுமல்லாமல் இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட பிறநாடுகளுக்கும் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பெயரில் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

95 சதவிகித மெயில் ஐ.டி கள் பிரபல (மைக்ரோசாப்ட்) நிறுவனத்தின் மெயில் ஐடியில் இருந்து வருவதால் அந்நிறுவனத்திற்கு பலமுறை தரவுகள் கேட்டு கடிதம் அனுப்பியும் தற்போது வரை மைக்ரோசாப்ட் நிறுவனம் தரவுகளை தர இயலாது என கூறி வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து புதிய வியூகம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதகாவும் அதன் மூலம் இன்னும சில தினங்களில் மர்ம நபர்கள் அடையாளம் காணப்படுவர் எனவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.