கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு. விவசாயிகளுக்கு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜூன்.29-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் மயிலாடுதுறையில் அறிவிப்பு. மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு முன்னாள் உறுப்பினர் இடும்பையன் மறைவையொட்டி அவரது படத்திறப்பு விழாவில், அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பங்கேற்று, உருவப்படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலை தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் “அதில் எந்த சமரசமும் கூடாது” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் “காவல்துறை முடுக்கிவிட பட வேண்டும், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு இயக்கங்கள் துவக்கப்பட வேண்டும், கல்வி பெரும் பங்காற்ற வேண்டும், அரசியல் இயக்கங்களும் அந்த உயரிய விழுமியங்களை உருவாக்க வேண்டும். சமரசம் ஏதுமில்லாமல் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்” என்று தமிழக மூத்தவரை விஜய்யை கேட்டுக்கொண்டார். சிங்க பெண் சிறப்பு அதிரடிப்படை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு “சிங்கப்பெண் திட்டத்தில் போலீஸார் பற்றாக்குறை இருக்குமேயானால், மாவட்ட நிர்வாகம் இது குறித்து ஆலோசித்து அறிக்கை தர வேண்டும், கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய வீரபாண்டியன், இந்தியாவை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுற்றி வளைத்து விட்டதாகவும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சிகளை அரசு அனுமதிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ள சபாநாயகர் நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பு கேள்விக்கு, “சபாநாயகர் ஒரு கட்சியின் பிரதிநிதி அல்ல.. அவர் சட்டமன்ற விதிகளை, நடைமுறைகளை வழுவக் கூடாது” என்றும் குறிப்பிட்டார். அதனையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “ராகவா லாரன்ஸ் ஒரு நல்ல நடிகர். ஆனால், அரசியலுக்கு வரும்போது மிகுந்த நிதானத்தோடு பேசிப் பழக வேண்டும். அரசியலில் நேர் எதிர் கருத்துக்கள் மிக இயல்பு. ஒரு கட்சி வெற்றி அடைவதும், இன்னொரு கட்சி தோல்வி அடைவது மிக இயல்பு. கருத்துக்கள் ஒன்று ஒன்றை முட்டி மோதலாம்.
ஆனால், கண்ணியக் குறைவான கருத்துக்களைப் பதியச் செய்யக்கூடாது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் விவகாரத்தில் முந்தைய அரசின் நிலை தொடரும் என முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. அதில் அவர் உறுதியாக இருக்க வேண்டும். மேகதாது அணை கட்டப்படக் கூடாது. அது வெறும் அணை, நீர் என்று பார்க்காமல் இரண்டு மாநிலங்களினுடைய உறவும் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக பார்க்க வேண்டும். விவசாயிகளின் கடன் அனைத்தும் ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்கு கடும் முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு அதற்காக உதவ வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஜூன்.29-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த இருக்கிறது என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.