தமிழ்நாடு

தேர்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியுள்ளதா? முதலமைச்சர் கேள்வி!

Tamil Selvi Selvakumar

தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும், பொறாமையின் காரணமாக பலர் விமர்சனம் செய்வதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது,  மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் ஒரு கோடி பேர் பயனடைவார்கள் என்றும் இத்திட்டம் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.

பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர், ஒவ்வோரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என்ற பிரதமர் மோடி 15 ரூபாய் கூட செலுத்தவில்லை என்று கூறினார். இத்தகைய சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவே எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்தி யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று பேசியதாக கூறினார்.

திமுகவின் ஆட்சிக்கு எத்தகைய ஆபத்து வந்தாலும் சிறிதளவும் அச்சப்படாமல் கொள்கை மற்றும் லட்சியத்தை மனதில் வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். எதிர்கட்சிகளின் கூட்டத்தால் கோபமடைந்த பிரதமர் மோடி, பிரதமர் என்பதையும் மறந்து ஏதேதோ பேசியுள்ளதாக கூறினார்.