தமிழ்நாடு

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கமாக மாறும் ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹால்!!

Malaimurasu Seithigal TV

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலின் பெயர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம் என்று மாற்றப்படவுள்ளது. 

குடியரசு தலைவத் திரவுபதி முர்மு, 5ம் தேதி மாலை சென்னை வரவிருக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், 6ம் தேதி காலை சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கவிருக்கிறார்.

பின்னர், அன்று இரவு, 7மணியளவில் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு, 'மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம் என புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் குடியரசு தலைவர் பங்கேற்று, புதிய பெயர் பலகையை திறந்து வைக்கவிருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, பழங்குடியின மக்கள், தமிழறிஞர்கள், சாதனையாளர்கள் போன்றோருக்கு அழைப்பிதழ் அனுப்ப ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். இந்த அரங்கில் தான், அமைச்சர்கள், தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது