தமிழ்நாடு

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதி வைக்கும் திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் வைப்பு நிதியாக ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.  

Malaimurasu Seithigal TV

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்புகளும் புதிய உச்சத்தை தொட்டு தற்போது படிபடியாக குறைந்து வருகிறது. இதில், பல குழந்தைகள், இந்தக் கொரோனா பாதிப்பால் தங்களது தாய் - தந்தையை இழந்து தவித்து வருகின்றன.

 அந்தவகையில் பெற்றோரை இழந்து அனாதைகளாக்கப்படும் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்கிற கோரிக்கை பலராலும் வைக்கப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு, கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும் என  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார்.

 இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் வைப்பு நிதியாக ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி நாளை தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.