தமிழ்நாடு

சாதி மத வேறுபாட்டை கடந்த சமுதாய வளைகாப்பு ...சீர்வரிசை பொருட்கள் வழங்கிய துணை சபாநாயகர்...!!

திருவண்ணாமலையில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

Malaimurasu Seithigal TV

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை வகித்த தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்,  புடவை உள்ளிட்ட  சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று திருவண்ணாமலை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா சாதி மத வேறுபாட்டை கடந்து நடைபெற்றது.

இதனை தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி தலைமையேற்று வளைகாப்பு விழாவில் நடத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து சமுதாய வளைகாப்பில் பங்கேற்ற 500க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், பூ, பழங்கள், வெற்றிலை பாக்கு, குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இதனை கர்ப்பிணி பெண்கள் மனமகிழ்வுடன் பெற்றுச் சென்றனர். அதுமட்டுமில்லாமல், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஐந்து வகையான அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

அதற்கு முன்னதாக, கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு காலங்களில் சாப்பிடக்கூடிய சத்தான உணவு கண்காட்சியை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி பார்வையிட்டு வந்தார்.