தமிழ்நாடு

டி.கே.சிவக்குமாருக்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி...அறிக்கையில் விளக்குவது என்ன?

Tamil Selvi Selvakumar

மேகதாதுவில் அணை கட்ட உத்தரவிட்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பல்வேறு குளறுபடிகளுக்கு பிறகு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் நிச்சயம் அணையை கட்டுவோம் என்று கூறினார். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி நதி நீர், டெல்டா மாவட்டங்களின் வாழ் வாதாரமாகவும், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், கர்நாடகாவில் முந்தைய அரசு அணை கட்ட முயற்சி மேற்கொண்டபோது அதிமுக அரசு அதனை தடுத்து நிறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேகதாது விவகாரத்தில் திறனற்ற திமுக அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, கர்நாடக அரசின் முயற்சியை கண்டிப்பதுடன், தமிழ்நாடு வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்கும் வகையில் அதிமுக சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, மேகதாதுவில் அணை கட்ட உத்தரவிட்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.