தமிழ்நாடு

விஜய்க்கு ஒண்ணுமே தெரியல!; முதல்ல வெளியில வரச் சொல்லுங்க" - Live-ல் விஜய்யை விட்டு விளாசிய எடப்பாடி

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரைத் தனது ரோல் மாடல்...

மாலை முரசு செய்தி குழு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அதிமுகவை 'ஊழல் சக்தி' என்று விமர்சித்தது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகவும் காட்டமாகப் பதிலளித்தார். விஜய் ஒரு கட்சித் தலைவராக இருந்துகொண்டு நாட்டு நிலவரம் தெரியாமல் பேசி வருவதாகச் சாடிய அவர், சுமார் 72 நாட்கள் மக்கள் மத்தியிலும் பொது வெளியிலும் வராமல் இருந்துவிட்டு இப்போது வந்து எங்களைப் பற்றிப் பேசுகிறார் என்று விமர்சித்தார். யாருடன் யார் கூட்டணியில் இருக்கிறார்கள், தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்ற அடிப்படை புரிதல் கூட அவருக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் சாடியதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ஊழல் என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார். ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்று வந்தவர்களையே தனது கட்சியில் சேர்த்துக்கொண்டு, அதிமுகவைப் பார்த்து ஊழல் சக்தி என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது என்று பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார். தான் முதலமைச்சராக இருந்தபோது தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் புகார்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சட்டரீதியாகச் சந்தித்து, நிரபராதி என்று தீர்ப்பு பெற்று வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரைத் தனது ரோல் மாடல் என்று கூறிவிட்டு, இப்போது அதே இயக்கத்தை விமர்சிப்பது முரண்பாடாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டணி குறித்துப் பேசிய அவர், முன்னதாக அதிமுகவைத் தனிமைப்படுத்த திமுக எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறினார். அதிமுக தலைமையில் தற்போது ஒரு வலுவான மெகா கூட்டணி அமைந்துள்ளதாகவும், இதில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட பல முக்கியக் கட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என்றும், முதலமைச்சர் வேட்பாளராகத் தான் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.

திமுக அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார். ஆளுங்கட்சியின் குறைகளை மறைப்பதற்காகவே மற்றவர்கள் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும், அதிமுக எப்போதும் மக்கள் பக்கம் நின்று பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.