யானைகள் வழித்தடங்களை பிப்ரவரி மாதத்திற்குள் அறிவிக்காவிட்டால் நீதிமன்றமே அறிவிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் யானை வழித்தடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பு வெளியிடக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, யானைகள் வழித்தடங்களை கண்டறிய குழுவை அமைத்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேபோல, யானைகள் வழித்தடங்களை அறிவிப்பது தொடர்பாக கால அட்டவணையையும் அரசு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசின் கால அட்டவணைப்படி யானைகள் வழித்தடம் அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அட்டவணைப்படி, நவம்பர் - டிசம்பர் மாதங்களில் யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டு, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அட்டவணைப்படி பிப்ரவரி மாதத்திற்குள் இறுதி அறிக்கையை வெளியிடாவிட்டால், அரசு நியமித்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் யானைகள் வழித்தடங்களை நீதிமன்றமே அறிவிக்கும் என தெரிவித்து, விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.