தமிழ்நாடு

" தாங்களும் வாழ்வில் உயர்ந்து அன்னையரையும் உயர்த்தி பெருமைப்படுத்துங்கள்..!" - ச.ம.க நிறுவனர் சரத்குமார்.

Malaimurasu Seithigal TV

சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனரும், நடிகருமான சரத்குமார் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

தனது வாழ்த்து  செய்தியில், 
"உறவுகளால் சூழப்பட்டிருக்கும் மனித வாழ்வில்,  பாசம், நேசம், கருணை, தியாகம், சகிப்புத்தன்மை, பொறுமை, தன்னலம் பாராத குணநலம், லட்சியத்துடன் தனித்துவமான அன்பு கொண்டு பெற்ற பிள்ளைகளையே உலகமாக எண்ணி பாதுகாக்கும் தேவதைகள் தான் அன்னையர்கள். ஆழமாக பின்னிப்பிணைந்த அவர்தம் உணர்வுகள் அனுதினமும் பெற்ற பிள்ளைகளின் நலனை எண்ணுவதில் தான் கவனம் செலுத்துகிறது".  

"ஆனால், பிள்ளைகள் பெற்றோரை அந்த வகையில் கவனிக்கின்றார்களா? கடந்த தலைமுறையில் காணாத உலகமயமாக்கப்பட்ட இன்றைய காலத்தில், முதியோர் இல்லங்களில் சேர்க்கை அதிகரிப்பது மிகுந்த வேதனைக்குரியது".

 "இப்பூவுலகைக் காணச் செய்தது முதல், பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி, அவர்கள் தங்கள் சுய காலில் நிற்கும் வரை தாங்கிப் பிடித்த அன்னையரை, வயதான பின்னர் கவனித்து கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவது நியாயமற்றது. ஆதரவின்றி அன்னையரை தவிக்கவிடாமல் இறுதிவரை தாங்கிநிற்பது பிள்ளைகளின் தலையாய கடமையாகும்".

ஆண்டுதோறும் உயிர்கொடுத்த தாய்மையை போற்றும் அன்னையர் தினத்தில், ஓர் நாள் வாழ்த்துகளை பகிர்வதோடு மட்டும் நின்று விடாமல், அவரவர் இல்லங்களில் அன்னையரின் தேவையை அறிந்து, பூர்த்தி செய்வதுடன் நன்முறையில் கவனித்து கொண்டு, தாங்களும் வாழ்வில் உயர்ந்து அன்னையரையும் உயர்த்தி பெருமைப்படுத்துங்கள்", என தன வாழ்த்துக்களை தெரிவித்தார்.