தமிழ்நாடு

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்...மரியாதை செலுத்திய ஈபிஎஸ்...!

Tamil Selvi Selvakumar

எம்.ஜி.ஆரின் 106- வது பிறந்தநாள் விழாவில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமி எம்.ஜி.ஆர் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி மரியாதை :

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி  ரோஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அ.தி.மு.க கொடியை ஏற்றினார்.

புத்தகம் வெளியிட்ட ஈபிஎஸ் :

தொடர்ந்து, அதிமுகவில் பணியாற்றி உயிர் நீத்த நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய ஈபிஎஸ், கேக் வெட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், அதிமுகவின் கொள்கைப் பரப்பு துணை செயலாளர் கலை புனிதன் எழுதிய ”மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மாண்புகள்” என்ற புத்தகத்தை, எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

உற்சாக வரவேற்பு :

இந்த விழாவில், அவை தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, சின்னையா, பா.பென்ஜமின், உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, அ‌தி‌.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அ.தி.மு.கவினர் வழிநெடுகிலும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.