தமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமி இன்று சங்கரன்கோவில் பயணம்!

Malaimurasu Seithigal TV

அதிமுகவின் 52-வது ஆண்டு விழாவையொட்டி, சங்கரன்கோவிலில் இன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவுள்ளாா்.

அதிமுக தொடங்கி 52-வது ஆண்டு விழா நேற்று மாநிலம் முழுவதும் கட்சி நிர்வாகிகளால் கொண்டாடப்பட்டது. இந்த தொடக்க விழாவை பொதுக்கூட்டங்கள் நடத்தியும், நலத்திட்டங்கள் வழங்கியும், கட்சி கொடியேற்றியும் கொண்டாட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்திருந்தாா். 

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக ஆண்டு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றுகிறாா். இதற்காக சங்கரன்கோவில்-சேர்ந்தமரம் சாலையில் திறந்தவெளி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி செல்கிறாா். பின்னர் அங்கிருந்து காரில் நெல்லை வழியாக சங்கரன்கோவிலுக்கு செல்லும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாளையங்கோட்டை கேடிசி நகர் மேம்பாலத்தில் வைத்து கட்சி நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனா்.