erode  
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு.. 'திருமங்கலம் பார்முலா'வை மிஞ்சிய 'ஈரோடு பார்முலா' வேலை செய்யுமா? - கருத்துக்கணிப்பு முடிவுகள்!

தேர்தலில் திமுக கூட்டணி 128 பூத்களில் வலுவாகவும், 138 பூத்களில் பலவீனமாகவும் இருந்தது...

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தந்தை பெரியார் பிறந்த மண், கணித மேதை ராமானுஜர் மற்றும் திருப்பூர் குமரன் போன்ற ஆளுமைகளின் அடையாளங்களைக் கொண்ட ஈரோடு கிழக்கு தொகுதி, சமீபத்திய இடைத்தேர்தல்கள் மூலம் தமிழக அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றது. ஜவுளித் தொழிலின் மையமாகவும், 'மஞ்சள் மாநகரம்' என்றும் அழைக்கப்படும் இந்தத் தொகுதியில் நிலவும் தற்போதைய கள நிலவரம் குறித்து விரிவான ஆய்வுகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 12.6 சதவீதம் பேரும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 27 சதவீதம் பேரும் உள்ளனர். 41 முதல் 60 வயதுடையவர்கள் 40 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 19.5 சதவீதமாகவும் உள்ளனர். சமுதாய ரீதியாகக் கொங்கு வேளாள கவுண்டர்கள் 33 சதவீதம் பேர் முதன்மையாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக முதலியார் சமூகத்தினர் 15 சதவீதம், வன்னியர்கள் 10 சதவீதம் மற்றும் செட்டியார்கள் 10 சதவீதம் எனப் பரவலாக உள்ளனர். இது 95 சதவீதம் நகர்ப்புறங்களைக் கொண்ட ஒரு முழுமையான நகரத் தொகுதியாகும்.

இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக ஜவுளித் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதாரச் சீர்கேடுகள் பெரிய குறையாக உள்ளது. சாயக் கழிவுகளைச் சுத்திகரிக்க முறையான நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது. மேலும், பாதாளச் சாக்கடைத் திட்டம் முழுமையடையாதது, சொத்து வரி உயர்வு மற்றும் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் முறையாகச் சென்றடையாதது போன்றவை மக்களின் வேதனையாக உள்ளன. மஞ்சள் ஆராய்ச்சி மையம் மற்றும் ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்பதும், நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, திமுக கூட்டணி (காங்கிரஸ்) சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 44.7 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் யுவராஜா 38.8 சதவீத வாக்குகளைப் பெற்றார். அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 128 பூத்களில் வலுவாகவும், 138 பூத்களில் பலவீனமாகவும் இருந்தது. அதிமுக 96 பூத்களில் வலுவாகவும், 82 பூத்களில் பலவீனமாகவும் இருந்தது. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி (மதிமுக) 57.48 சதவீத வாக்குகளைப் பெற்றுப் பெரும் முன்னிலை வகித்தது. அப்போது ஸ்விங் பூத்களின் எண்ணிக்கை 33 ஆகக் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய 'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் திமுக கூட்டணி 38 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 34 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் சுமார் 12 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளையும் பிரிக்கக்கூடும். பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது திமுக 150 பூத்களில் வலுவான நிலையில் உள்ளதாகவும், அதிமுக 110 பூத்களில் வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்தத் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையேயான வெற்றி வித்தியாசம் சுமார் 4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்களின் ஆதரவு திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமையக்கூடும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.