தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை...

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் அதிமுகவில் அமைச்சர்களாக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், கே.சி வீரமணி, வேலுமணி உள்ளிட்டவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அதிமுகவில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர்  இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட  தங்கமணிக்கு சொந்தமான 69-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.