தமிழ்நாடு

முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரி நீர் திறப்பு... மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்...

முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

Malaimurasu Seithigal TV

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 138.40 அடியை எட்டியுள்ளது. 

அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரத்து 635 கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவிற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

அதன்படி, அணையில் இருந்து விநாடிக்கு 534 கன அடி தண்ணீர் வீதம் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மொத்தம் உள்ள13 மதகுகளில் 3 மற்றும் 4வது மதகுகளில் இருந்து வினாடிக்கு 534 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

இந்த நீர் வண்டிப்பெரியார், வல்லக்கடவு வழியாக இவழியாக இடுக்கி அணைக்கு வெளியேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கேரள மாநிலத்துக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் நீர்வழி பாதையில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் முல்லைப் பெரியாற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் இடுக்கி அணையில் கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறினார். தற்போது வரை நீர்வழி பாதையில் வசித்து வரும் 859 குடும்பங்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.