தமிழ்நாடு

புகார் கொடுக்க சென்ற பெண்ணை வளைத்துபோட்ட சப்-இன்ஸ்பெக்டர்... எஸ்.பி. அலுவலகம் முன்பு இளம் பெண் போராட்டம்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஜோஸ்பின். இவர் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற போது அப்போதைய உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கத்திடம் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜோஸ்பின் போலீசில் புகார் அளித்தார். 

அதன் மீது போலீசாரால் நடவடிக்கை எடுக்காத நிலையில் நீதிமன்ற உத்திரவின்பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் மீது போடப்பட்ட குறிப்பிடப்பட்ட குற்றப் பிரிவுகளை மாற்றி பிணையில் வெளி வரும் வகையிலான குற்றப் பிரிவுகள் பதிவு செய்து சுந்தரலிங்கத்தை போலீசார் பாதுகாப்பதாகவும் அதனால் அவர் பிணையில் வெளிவந்ததாக குற்றஞ்சாட்டியும் சுந்தரலிங்கத்துக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய கேட்டும் ஜோஸ்பின் இன்று திடீரென நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அவரிடம் பெண் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்ற நிலையில், அதற்கு ஒத்துழைக்க மறுத்து ஜோஸ்பின் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பெண் போலீசார் கும்பலாகத் திரண்டு அந்தப் பெண்ணை குண்டுகட்டாக தூக்கி மாற்ற முயன்றனர். ஆனால் அந்தப் பெண் பிடிவாதம் பிடித்தார். தீவிர முயற்சிக்குப் பின்னர் காவல்துறை வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.இதனால் எஸ்பி அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.