தமிழ்நாடு

வானிலை மையத்தின் அடுத்த அறிவிப்பு...மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு...!

Tamil Selvi Selvakumar

நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கனமழை எச்சரிக்கை:

மேலும் இந்த  காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்படுள்ளது. இதனால் இன்றும் நாளையும் அந்தமான் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், நாளை முதல் 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இதன் காரணமாக நாளை முதல் 21ம் தேதி வரை தென்மேற்கு அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆழ்கடல் மீன்பிடி பணியில் உள்ள மீனவர்கள், அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.