முன்னாள் அ.தி.மு.க மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் 33 இடங்கள், சென்னையில் 14 இடங்கள், ஈரோட்டில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள், கோயம்புத்தூரில் 2 இடங்கள், கரூர் 2 இடங்கள், கிருஷ்ணகிரியில் 1 இடங்கள், வேலூரில் 1 இடங்கள், திருப்பூர் 1 இடங்கள், பெங்களூரு 2 இடங்கள், ஆந்திராவில் 1 இடங்கள் என மொத்தம் 69 இடங்களில் சோதனையானது மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் 2,37,34,458 கோடி பணம், 1.130 கிராம் தங்கம், 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டுபிடித்துள்ளதாகவும், அதில் கணக்கில் வராத பணம் 2,16,37,300 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், செல்போன்கள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், ஹார்டு டிஸ்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தங்கமணி.மற்றும் அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.