தமிழ்நாடு

வலுவான கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக...பொய் செய்தியை பரப்பி வருகிறது - உதயநிதி!

Tamil Selvi Selvakumar

அரசு மாதிரி பள்ளிகளில் நுழைவு தேர்வு தொடர்பான சுற்றறிக்கை மீது கவனம் செலுத்தி அரசு நடவடிக்கை எடுக்கும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ”நான் முதல்வன் திட்டம்” மூலம் தமிழ்நாடு முழுவதிலும் அரசு போட்டித்தேர்வுகளுக்கான இலவசம் பயிற்சி வழங்கும் திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் பொன்முடி, சி.வி.கணேசன் மற்றும் அரசு துறை செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவன பணியிடங்களில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்திருப்பதாக கூறிய அவர், அதற்கு மாணவர்கள் தயாராகும் வகையில் இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், அரசு மாதிரி பள்ளிகளில் நுழைவு தேர்வு தொடர்பான சுற்றறிக்கை மீது கவனம் செலுத்தி நுழைவுத் தேர்வு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைவதை பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக, வடமாநில தொழிலாளர் குறித்து பொய்யான செய்தியை பரப்புவதாக குற்றம்சாட்டினார்.