தமிழ்நாடு

பட்டியலின மக்களுக்கான இலவச வீட்டுமனை.. சாதி அடிப்படையில் அமல்படுத்தும்படி கோர முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

Malaimurasu Seithigal TV

பட்டியலின மக்களுக்கான இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தை, சாதி அடிப்படையில் அமல்படுத்தும்படி கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் வெள்ளகவுண்டபாளையம் கிராமத்தில் பட்டியலினத்தவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் 1.52 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

வீடு வசதியில்லாத அருந்ததியினர் மக்கள் விடுத்த தொடர் கோரிக்கையின் அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில்,  அருந்ததியினர் சமுதாய மக்களுக்கு மட்டுமே வீட்டுமனைகளை ஒதுக்க  உத்தரவிட வேண்டும் என வெள்ளகவுண்டபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, வீட்டு மனை கோரி விண்ணப்பித்த பட்டியலினத்தை சேர்ந்த அருந்ததியினத்தவர் மற்றும், ஆதி திராவிடர்களின் விண்ணப்பங்கள் சாதி பேதமின்றி பரிசீலிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியது.

மேலும், தகுதியான பட்டியலினத்தவர்களுக்கு இலவச வீட்டுமனை  ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சாதி அடிப்படையில் வீட்டுமனை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தும்படி கோர முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.